ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் அகஸ்தியர் அருவி
அகஸ்தியர் அருவி திருநெல்வேலியில் இருந்து 53 கிலோமீட்டர் தொலைவிலும், அம்பாசமுத்திரத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும், பாபநாசம் சிவபெருமான் கோயிலுக்கு மிக அருகில், 4 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற சுற்றுலா ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. இந்த அருவியின் உயரம் 100 மீட்டர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பல அருவிகள் உள்ளன. களக்காடு பகுதிகளில் உள்ள அருவிகளில் மழை காலத்தில் மட்டும் தண்ணீர் விழும்.
குற்றாலத்திலுள்ள அருவிகளில் சீசன் காலங்களில் மட்டுமே தண்ணீர் விழும். ஆனால் பாபநாசம் மலைப்பகுதிகளிலுள்ள பாணதீர்த்த அருவி, அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும்.
பாபநாசர் கோயிலில் இருந்து இந்த அருவியை நடந்தே வந்தடையலாம் அல்லது ஆட்டோ போன்ற வாகனங்களிலும் செல்லலாம் . இந்த அருவியில் நீராடுவது நம் பாவத்தை கழுவுவதற்கு மட்டுமின்றி பல
மூலிகைச் செடிகளை கடந்து வருவதால் நோய்களை குணப்படுத்தவும் உதவும் என்று நம்பப்படுகிறது.
இந்த அருவியின் வழியாக மலை மேல் நடந்து சென்றால், இதன் தொடக்க நிலையை அடையலாம். கல்யாண தீர்த்தம் என்றழைக்கப்படும் அந்த இடம், ஒரு பெரிய சுவற்றின் பின்னால் ஒழித்து வைக்கப்பட்டதை போல் அமைந்திருக்கும். இதற்கு புராணம் சொல்லும் காரணம், சிவபெருமானின் திருமணத்தை காண வந்த எண்ணிலடங்கா கூட்டத்தினால் ஏற்பட போகும் அசம்பாவிதத்தை தடுக்க, பூமியை சமநிலைப்படுத்த அகஸ்தியர் செய்த அமைப்பு இதுவென்று.
இந்த அருவி ஆனது பார்ப்பதற்கு மிக அழகாகவும் , இயற்கையின் படைப்பில் ரம்மியமனதாகவும் காட்சி தரும். அனைவரும் சென்று பார்க்க சிறந்த இடம்... நம் பாவம் போக்கும் பாபநாசம் ல் அமைந்துள்ள அகஸ்தியர் அருவி....
Comments
Post a Comment